Motorcycle - சிங்களம்
>> Thursday 1 October 2015
சிங்கள மொழித்திரைப்படங்ககளை
இணையத்தில் தேடிப்பிடித்து தரவிரக்கி பார்பதற்கான வாய்புகள் இல்லாவிட்டாலும் ஓரளவு
முயன்று டிவிடிக்களை தேடிப்பிடித்து பார்பதற்கான வாய்புகள் உண்மையில் இருந்ததுதான்.
இருந்தும் சிங்களத் திரைபடங்களில் அழகியல் அம்சங்களின் வரட்சி காரணமாகவும்
மிகைநடிப்புக் காரணமாகவும் சிங்கள மக்களே உதாசீனப்படுத்தும் நிலையில் இருந்தன. இதே
புறச்சூழலின் கட்டமைப்பு என்மீது திணிக்கப்பட்டதினால் சிங்கள மொழித்திரைப்படங்கள்
மீது ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதும் இல்லை.
இருந்தும் பலசமயம் சில சிங்கள மொழித்திரைப்படங்கள் சிலாகிக்கக்படுவதினை
பதிரிகையிலும் வானொலியிலும் அவதானித்தது உண்டு.
நடந்து முடிந்த
யாழ்பாணம் சர்வதேச சினிமா விழாவில் புதிய சிங்கள மொழித்திரைப்படங்கள்
காட்சிப்படுத்தப்பட்டன. பார்க்கும்போது செவிட்டில் ஓங்கி அறைந்ததுபோல் இருந்தது.
காலம்காலமாக தென்னிந்திய திரைப்படங்களைப் பார்த்து சுரணை போயிருந்த சமயத்தில் மிக
அழகியல் அம்சத்துடன் மிக நெருக்கமான மனவெழுச்சிகளை உண்டுபண்ணக்கூடிய படங்களாக
விழாவுக்கு தேர்வாகிய சிங்களப்படங்கள் இருந்தன. இவ்ளவு காலம் இவற்றை பார்க்காமல்
விட்டது எனது துரதிர்ஷ்டவசமான சம்பவம்தான்.
கொழும்பு புறநகர்பகுதியில்
வசிக்கும் மக்களின் வாழ்க்கையின் யதார்த்தப்போக்கையும் அவர்களின் வாழ்வியல்
அபத்தங்கள், ஆசைகள், நிராசைகள் பற்றிப்பேசும்படம்தான் ஷமீர ரங்கன இயக்கிய Motorcycle . படம் ஆரம்பிக்கும்போதே தோன்றும் எழுத்தோட்டங்கள் நடர்ந்துகொண்டிருக்க
மேட்டுக்குடிகள்வாழும் கொழும்பின் இன்னுமொருபக்கமான விளிம்புநிலை மக்களின்
செயல்பாடுகள் யதார்த்தமாக ஒளிப்படம்பிடிக்கப்படுகின்றன. அதன் ஒளிச்சடங்களே படத்தின்
மையைப்போக்கை பார்வையாளனுக்கு இவர்களைப்பற்றிதான் படம் பேசப்போகின்றது என்பதினை
அறிவுறுத்துகின்றது.
வறுமையான நெருக்காமான
குடியிருப்பில் கிட்டார் இசைக்கலைஞனாக வாழும் இளைஞன் ஒருவனைச்சுற்றி படம்
நகர்கின்றது. அவனுக்கு இயல்பாக ஒரு காதல் இருக்கின்றது. அவனது காதலி உயர்த்தம் படித்துக்கொண்டிருகின்றாள்.
மிக வறுமையாக அவனது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தாலும் ஒரு மோட்டார்சைக்கிலில் சொந்தமாக
வேண்டி ஓட்டவேண்டும் அதும் காதலியுடன் என்பது அவனது தீராத ஆசையில் ஒன்றாக
இருகின்றது. அதற்கான பணத்தினை அவனுக்கு புறட்டமுடியாமல் இருகின்றது. தினமும் வாகன
காட்சியறைகுச் செல்வதும் அசூசையாக பார்பதுமாக அவனது ஏக்கங்கள் கழிகின்றன. இந்த
நேரத்தில் அவனுக்குத் தெரிந்த கராட்ஜில் சுப்பக்கப் மோட்டார்சைக்கில் ஒன்று மலிவாக
கிடைகின்றது. அம்மாவின் நகையினை அடகுவைத்து மோட்டார்சைக்கிளை சமரசம்செய்து வேண்டிக்கொள்கின்றான்.
அது ஒரு திருட்டு மோட்டார்சைக்கில் என்பது அவனுக்கு அப்போது தெரியாமல் இருகின்றது.
வாகனப்பதிவு பத்திரங்களை அப்புறம் தருவதாகச் சொல்கிறார்கள். வண்டி கிடைத்த மகிழ்ச்சியில்
அவனும் செல்கின்றான்.
மறுநாள் காதலியோடு
முழுமையாக அத்தினத்தினை செலவிட எண்ணுகின்றான். அவளோடு சுபக்கப்பில் கொழும்புநகரில்
சுத்துகின்றான். அவர்களுக்கு இடையிலான காதல், வாலிபத்தன்மையின் அவசரங்கள் என்று
வெகுளித்தனம் கலந்த அவர்களது காதல் தொடர்கின்றது. பெரும் அடுக்குமாடிக்கடைகளில் விலை
அதிகம் உள்ள உடைகளை எடுத்து உடைமாற்றும் இடத்தில் மாற்றி ரசிப்பதும் அவற்றில்
எதனையும் வேண்டாமல் வருவதாகவும் அவர்களது ஆசைகள் கடந்து செல்கிறன.
கிட்டத்தட்ட
ஒரேநாளில் நடக்கும் கதையாகத்தான் படத்தின் முக்கால் வாசிப்பங்கு இருக்கின்றது. அவன்
காதலியோடு சுத்தும் நேரங்கள்தான் அவை. விகாரமஹாதேவி பூங்காவை காட்சிப்படுத்தியவிதங்கள்
மிக அட்டகாசமானவை. கடலைப்பார்த்துக்கொண்டு தண்டவாளம் அருகே குடைக்குகீழ் இருந்து எதிர்காலத்தைப்பற்றி
உருக்கமாக பேசுகின்றார்கள். மிக நீண்ட நேர ஒரே ஷாட்டில் மிக முக்கியமான காட்சி வருகின்றது.
கதாநாயகி எதிர்காலத்தை யோசித்து நமக்கு இந்தக்காதல் சரிவராது பிரிந்து விடலாம்
என்று பேசும் காட்சிகள் அவை. பின்னணி இசை இல்லாமல் ஒலிக்கும் அவை மிகுந்த
நெகிழ்வுத்தன்மையானவை. பின்னால் ரயில்கள் சென்றுகொண்டிருக்க மிகுந்த உணர்ச்சிகளை கிளரச்செய்யும்.
பின்னணி இசை அக்காட்சிக்கு ஒலித்திருந்தால் இன்னும் மகத்துவமான காட்சிப்படிமமாக
அவை இருந்திருக்கும்.
ஒரேநாளில் அவனது
காதல் முடிவுக்கு வருகின்றது. தாங்க முடியா சோகத்தில் வரும்போது அவனது
மோட்டார்சைக்கிலுக்கு சொந்தக்காரரால் பறிமுதல் செய்யப்படுகின்றது. சுற்றி சுற்றிப்பார்த்தல்
ஒருவரையொருவர் மாறி மாறி ஏமாத்துகின்றார்கள். அது பணத்துக்காவும் போதைப்பொருள்
பாவனைக்குமாக இருகின்றது. விளிம்புநிலை மக்களின் வாழ்வியலின் ஒருபக்கம் எப்படி
சுற்றி இருக்கும் வலைப்பின்னலில் அவர்களை அறியாமலே நகர்த்தப்படுகின்றார்கள்
என்பதினை படம் பேசுகின்றது. பெரும்பாலான வாலிபர்களின் கனவுகளும் ஏக்கமும்
போதைப்பொருள் வேண்ட செலவழிக்கும் பணத்துக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ
ஈடுபடுகின்றனர் என்பதினை இயக்குனர் சொல்லவிழைகின்றார்.
படத்தின் நெருடிய
பகுதி இசையும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த காதல் தீடிர் என்று முடிவுக்கு
வருவதும்தான். காதல் சரிவுகள் சரிவர சொல்லப்படவில்லை. படத்தின் இசையில் இன்னும் நுணுக்கம் இருந்தால் இன்னும் சுவாரசியமாக
இருக்கும்.
கொழும்பு
புறநகர்பகுதியினை இந்தளவு யதார்த்தமாக காட்டிள்ளது மிகுந்த பரவசத்தை தருகின்றது. கஞ்சா
விர்ற்கும்பபெண், அவர்கள் பகுதில் வழமையாக மோட்டார்சைக்கில் ஓடுபவர்கள் புதிதாக
வேண்டிய இவனுடன் முரண்படல், அடகுக்கடையில் திருட்டு நகைவைக்க வருபவர்கள் என்று
விளிம்புநிலை மக்களின் அபத்தங்கள் நன்கு பதிவாக்கப்பட்டுள்ளது. டிராபிக் பொலிசார்
லஞ்சம் வேண்டும் முறைகள் எல்லாம் யதார்த்தமாக இருப்பது ரசிக்கவைக்கிறது. முக்கியமாக
எல்லை மீறாத நடிப்பு. ஒளிப்பதிவு கண்களை ஒளிர்வடைய வைகின்றது. மிக யதார்தமான உருவாக்கமாக அமைந்திருக்கின்றது.
0 கருத்துக்கள்:
Post a Comment