குற்றம் கடிதல்

>> Sunday 4 October 2015

குற்றம் கடிதல் சமீபத்தில் பார்ததில் மனதுக்குள் நெருக்கமாக உளீர்க்கப்பட்ட படம். காட்சிப்படிமத்தில் செறிவாக கதைசொல்லல் நகர்கின்றது. படக்கதைகுக்கு உரிய மிகமுக்கியமான தகுதிகளை கொண்டிருகின்றது.

பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவனை மெர்லின்(ராதிகா பிரசித்தா) என்ற இளம் வயது ஆசிரியர் சாதரணமாக கண்ணத்தில் அடித்ததில் மயக்கமாகி கீழே விழுகிறான். அதன் பின்பு நடந்தது என்ன என்பதுதான் கதை. ஒரு தனிப்பட்ட கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி கதையைப்பின்னாமல் சம்பவங்களின் அடிப்படையில் படக்கதையை பின்னியுள்ளார் இயக்குனர் பிரம்மா.

சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்களாலும், காவல் துறை, ஊடகம், பொதுமக்கள் ஆகியோராலும் எவ்வாறு பார்க்கப்படுகிறது அணுகப்படுகின்றது என்பதை யதார்த்தமாகவும் மிகைபடுத்தப்படாமலும் அழுத்தமாகவும் சொல்லப்படுகின்றது. பார்வையாளர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் இச் சம்பவங்களையொட்டிப் பல தரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட கோணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எல்லாருடைய பின்னணிகளும் முறையான படக்கதையின் ஆரம்பத்திலே சொல்லப்பட்டிருகின்றன. அசம்பாவிதம் நிகழக் காரணமான ஆசிரியையின் உணர்வு, கணவனின் உணர்வு, பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறை, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய்மாமனின் கட்டுக்கடங்காத கோபம், அம்மாவின் கையறு நிலை, என எல்லாமே மிகச்செறிவானவை.

பாலியல் கல்வியை பாடசாலையில் கற்பிப்பது தேவையா என்று விவாதங்கள் பாடசையில் நீள்கின்றது. படத்தின் மையமும் அதனைச்சார்ந்துதான் இருகின்றது. ஒரு சிறுவன் தனது பகுப்பில் படிக்கும் சகமாணவிக்கு முத்தம்கொடுத்து விடுகின்றான். அதனை மெர்லில் டீச்சர் அணுகுகம் முறையில்தான் படத்தின் அடிநாதம் கட்டமைக்கப்பட்டு இருகின்றது. இவ்வாறான பாலியல் சார்ந்த கவர்ச்சியை ஓட்டிய பிரச்னைகள் பாடசாலையில் முளைக்கும்போது அதனைக்கையாளும் ஆசரியர்கள் அதனை இலகுபடுத்தி அதுதொடர்பான அடிப்படை புரிதலை பாதிக்கப்பட்ட மாணவன்,மாணவிக்கு புகுத்தாமல் கையாளும் நிலையில் ஏற்படும் விளைவுகளின் ஒரு சிக்கலான பகுதிதான் படத்தில் பேசப்படுகின்றது. 

நடிகர்களின் தேர்வு மிகப்பெரிய வியப்பை தரக்கூடியது. புதிதாக வீட்டை எதிர்த்து திருமணம் முடித்த மெர்லின் பாத்திரத்தில் நடித்த ராதிகா பிரசித்தாவின் பாத்திர தேர்வு மிக நுணுக்கமானது. கணவனுடன் இருக்கும் காதல் காட்சிகளில் பட்டப்பாக அவரது முட்டைக்கண்கள் பேசுகின்றது. பள்ளியில் மாணவர்கள் சேட்டைவிடும்போது அவரது முகம் சிடுமூஞ்சியாக மாறும்போது அவரது விரிந்த கண்கள் மிரட்டுகின்றன.

ஒருநாளில் நடக்கும் சம்பவங்களினூடே படக்கதை வேகமாக நகர்கிறது. வேகமான திரைக்கதை என்றாலும் பல்வேறு நுட்பங்களையும் தவறவிடாமல் கவனித்திருகின்றார்கள். கோபத்தின் உச்சியில் இருக்கும் தாய்மாமன் பள்ளியின் அதிபரை சொற்களால் காட்சி எடுக்கின்றார். அதற்கு அதிபரின் மனைவி சொல்லும் சில வார்த்தைகள் அவர் மனதைத் ஆழமாக தொடுகின்றன. நாங்க விட்ற மாட்டோம் தம்பிஎன்று கலப்படம் இல்லாத உணர்வுடன் சொல்லும்போது தாய்மாமனின் மனம் நெகிழ்வதை மகத்துவமாக ஒளிப்படம் பிடிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மாணவனின் தாயை ஆசிரியை சந்திக்கும் இடம் அற்புதமான தருணங்களாக நிறைந்திருக்கின்றன.

வசனங்களின் துணைகள் இல்லாமல் காட்சிகளால் கதை சொல்லும் கலை பிரம்மாவுக்குக் அட்டகாசமாக கைகூடியிருக்கிறது. கிறிஸ்த சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்ட தாயாரின் விருப்பத்தினை மீறி இந்துவான தனது காதலனை திருமணம் செய்துகொண்டது எந்த வசனத்திலும் சொல்லப்படவில்லை. ஆனால் காட்சிகளின் கதைசொல்லல் முறை அதனை அழகாகச் சொல்லும். பாதிக்கப்பட்ட ஆசிரியர் மிகுந்த மனவெழுச்சியில் தடுமாறும்போது தான் மதம் மாறி பொட்டு வைத்ததால் தான் இயேசு தன்னை தண்டிக்கிறாரோ என்ற குற்ற உணர்ச்சியில் தன் நெற்றியில் வைத்த பொட்டை திரும்பத் திரும்ப அழிக்கும் காட்சிகள் யதார்த்தமான முதிராத பெண்ணின் தடுமாற்றங்களை வெளிப்படுத்துகின்றது.
 
இயல்புத்தன்மையை படரவிடும் அழகான மணிகண்டனின் ஒளிப்பதிவு.  மிகவும் இயல்பான உருவாக்கம். நெகிழ்வூட்டும் பின்னணியிசை, கொஞ்சம் நேர இருப்புக்காக நடுவில் திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள், குற்றவுணர்ச்சியை பற்றிப் பேசும் கூத்துக் காட்சிகள் போன்ற மிகச் சில விஷயங்களைத் தவிர மிக அற்புதமான படமாக குற்றம் கடிதல் அமைத்திருக்கின்றது.


Read more...

Motorcycle - சிங்களம்

>> Thursday 1 October 2015

சிங்கள மொழித்திரைப்படங்ககளை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிரக்கி பார்பதற்கான வாய்புகள் இல்லாவிட்டாலும் ஓரளவு முயன்று டிவிடிக்களை தேடிப்பிடித்து பார்பதற்கான வாய்புகள் உண்மையில் இருந்ததுதான். இருந்தும் சிங்களத் திரைபடங்களில் அழகியல் அம்சங்களின் வரட்சி காரணமாகவும் மிகைநடிப்புக் காரணமாகவும் சிங்கள மக்களே உதாசீனப்படுத்தும் நிலையில் இருந்தன. இதே புறச்சூழலின் கட்டமைப்பு என்மீது திணிக்கப்பட்டதினால் சிங்கள மொழித்திரைப்படங்கள் மீது ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதும் இல்லை. இருந்தும் பலசமயம் சில சிங்கள மொழித்திரைப்படங்கள் சிலாகிக்கக்படுவதினை பதிரிகையிலும் வானொலியிலும் அவதானித்தது உண்டு.

நடந்து முடிந்த யாழ்பாணம் சர்வதேச சினிமா விழாவில் புதிய சிங்கள மொழித்திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பார்க்கும்போது செவிட்டில் ஓங்கி அறைந்ததுபோல் இருந்தது. காலம்காலமாக தென்னிந்திய திரைப்படங்களைப் பார்த்து சுரணை போயிருந்த சமயத்தில் மிக அழகியல் அம்சத்துடன் மிக நெருக்கமான மனவெழுச்சிகளை உண்டுபண்ணக்கூடிய படங்களாக விழாவுக்கு தேர்வாகிய சிங்களப்படங்கள் இருந்தன. இவ்ளவு காலம் இவற்றை பார்க்காமல் விட்டது எனது துரதிர்ஷ்டவசமான சம்பவம்தான்.

கொழும்பு புறநகர்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையின் யதார்த்தப்போக்கையும் அவர்களின் வாழ்வியல் அபத்தங்கள், ஆசைகள், நிராசைகள் பற்றிப்பேசும்படம்தான் ஷமீர ரங்கன இயக்கிய Motorcycle . படம் ஆரம்பிக்கும்போதே தோன்றும் எழுத்தோட்டங்கள் நடர்ந்துகொண்டிருக்க மேட்டுக்குடிகள்வாழும் கொழும்பின் இன்னுமொருபக்கமான விளிம்புநிலை மக்களின் செயல்பாடுகள் யதார்த்தமாக ஒளிப்படம்பிடிக்கப்படுகின்றன. அதன் ஒளிச்சடங்களே படத்தின் மையைப்போக்கை பார்வையாளனுக்கு இவர்களைப்பற்றிதான் படம் பேசப்போகின்றது என்பதினை அறிவுறுத்துகின்றது.

வறுமையான நெருக்காமான குடியிருப்பில் கிட்டார் இசைக்கலைஞனாக வாழும் இளைஞன் ஒருவனைச்சுற்றி படம் நகர்கின்றது. அவனுக்கு இயல்பாக ஒரு காதல் இருக்கின்றது. அவனது காதலி உயர்த்தம் படித்துக்கொண்டிருகின்றாள். மிக வறுமையாக அவனது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தாலும் ஒரு மோட்டார்சைக்கிலில் சொந்தமாக வேண்டி ஓட்டவேண்டும் அதும் காதலியுடன் என்பது அவனது தீராத ஆசையில் ஒன்றாக இருகின்றது. அதற்கான பணத்தினை அவனுக்கு புறட்டமுடியாமல் இருகின்றது. தினமும் வாகன காட்சியறைகுச் செல்வதும் அசூசையாக பார்பதுமாக அவனது ஏக்கங்கள் கழிகின்றன. இந்த நேரத்தில் அவனுக்குத் தெரிந்த கராட்ஜில் சுப்பக்கப் மோட்டார்சைக்கில் ஒன்று மலிவாக கிடைகின்றது. அம்மாவின் நகையினை அடகுவைத்து மோட்டார்சைக்கிளை சமரசம்செய்து வேண்டிக்கொள்கின்றான். அது ஒரு திருட்டு மோட்டார்சைக்கில் என்பது அவனுக்கு அப்போது தெரியாமல் இருகின்றது. வாகனப்பதிவு பத்திரங்களை அப்புறம் தருவதாகச் சொல்கிறார்கள். வண்டி கிடைத்த மகிழ்ச்சியில் அவனும் செல்கின்றான்.

மறுநாள் காதலியோடு முழுமையாக அத்தினத்தினை செலவிட எண்ணுகின்றான். அவளோடு சுபக்கப்பில் கொழும்புநகரில் சுத்துகின்றான். அவர்களுக்கு இடையிலான காதல், வாலிபத்தன்மையின் அவசரங்கள் என்று வெகுளித்தனம் கலந்த அவர்களது காதல் தொடர்கின்றது. பெரும் அடுக்குமாடிக்கடைகளில் விலை அதிகம் உள்ள உடைகளை எடுத்து உடைமாற்றும் இடத்தில் மாற்றி ரசிப்பதும் அவற்றில் எதனையும் வேண்டாமல் வருவதாகவும் அவர்களது ஆசைகள் கடந்து செல்கிறன.

கிட்டத்தட்ட ஒரேநாளில் நடக்கும் கதையாகத்தான் படத்தின் முக்கால் வாசிப்பங்கு இருக்கின்றது. அவன் காதலியோடு சுத்தும் நேரங்கள்தான் அவை. விகாரமஹாதேவி பூங்காவை காட்சிப்படுத்தியவிதங்கள் மிக அட்டகாசமானவை. கடலைப்பார்த்துக்கொண்டு தண்டவாளம் அருகே குடைக்குகீழ் இருந்து எதிர்காலத்தைப்பற்றி உருக்கமாக பேசுகின்றார்கள். மிக நீண்ட நேர ஒரே ஷாட்டில் மிக முக்கியமான காட்சி வருகின்றது. கதாநாயகி எதிர்காலத்தை யோசித்து நமக்கு இந்தக்காதல் சரிவராது பிரிந்து விடலாம் என்று பேசும் காட்சிகள் அவை. பின்னணி இசை இல்லாமல் ஒலிக்கும் அவை மிகுந்த நெகிழ்வுத்தன்மையானவை. பின்னால் ரயில்கள் சென்றுகொண்டிருக்க மிகுந்த உணர்ச்சிகளை கிளரச்செய்யும். பின்னணி இசை அக்காட்சிக்கு ஒலித்திருந்தால் இன்னும் மகத்துவமான காட்சிப்படிமமாக அவை இருந்திருக்கும்.
 
இயக்குனர் ஷமீர ரங்கன
ஒரேநாளில் அவனது காதல் முடிவுக்கு வருகின்றது. தாங்க முடியா சோகத்தில் வரும்போது அவனது மோட்டார்சைக்கிலுக்கு சொந்தக்காரரால் பறிமுதல் செய்யப்படுகின்றது. சுற்றி சுற்றிப்பார்த்தல் ஒருவரையொருவர் மாறி மாறி ஏமாத்துகின்றார்கள். அது பணத்துக்காவும் போதைப்பொருள் பாவனைக்குமாக இருகின்றது. விளிம்புநிலை மக்களின் வாழ்வியலின் ஒருபக்கம் எப்படி சுற்றி இருக்கும் வலைப்பின்னலில் அவர்களை அறியாமலே நகர்த்தப்படுகின்றார்கள் என்பதினை படம் பேசுகின்றது. பெரும்பாலான வாலிபர்களின் கனவுகளும் ஏக்கமும் போதைப்பொருள் வேண்ட செலவழிக்கும் பணத்துக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடுகின்றனர் என்பதினை இயக்குனர் சொல்லவிழைகின்றார்.

படத்தின் நெருடிய பகுதி இசையும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த காதல் தீடிர் என்று முடிவுக்கு வருவதும்தான். காதல் சரிவுகள் சரிவர சொல்லப்படவில்லை. படத்தின் இசையில் இன்னும் நுணுக்கம் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

கொழும்பு புறநகர்பகுதியினை இந்தளவு யதார்த்தமாக காட்டிள்ளது மிகுந்த பரவசத்தை தருகின்றது. கஞ்சா விர்ற்கும்பபெண், அவர்கள் பகுதில் வழமையாக மோட்டார்சைக்கில் ஓடுபவர்கள் புதிதாக வேண்டிய இவனுடன் முரண்படல், அடகுக்கடையில் திருட்டு நகைவைக்க வருபவர்கள் என்று விளிம்புநிலை மக்களின் அபத்தங்கள் நன்கு பதிவாக்கப்பட்டுள்ளது. டிராபிக் பொலிசார் லஞ்சம் வேண்டும் முறைகள் எல்லாம் யதார்த்தமாக இருப்பது ரசிக்கவைக்கிறது. முக்கியமாக எல்லை மீறாத நடிப்பு. ஒளிப்பதிவு கண்களை ஒளிர்வடைய வைகின்றது. மிக யதார்தமான உருவாக்கமாக அமைந்திருக்கின்றது.


Read more...

Taare Zameen Par - 2007 (ஹிந்தி)

>> Wednesday 30 September 2015

இந்தப் பதிவு காந்தி செத்திட்டாரா என்ற கணக்கில் சிலருக்கு இருக்கும். ஆனால் 2007-இல் வெளிவந்த Taare Zameen Par திரைப்படத்தை சமீபத்தில்தான் நான் பார்த்தேன் என்பதினை மிகுந்த தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கின்றேன். பொதுவாக பாலிவூட் திரைப்படங்கள் மீது பெரிதாக ஈடுபாடுகள் வந்ததில்லை. மலைச்சரிவுகளில் குட்டைப்பாவடை அணிந்து இடுப்பை வளைத்து பின்புறங்களை ஆட்டி நாயகிகள் ஆட, வெறிகொண்ட நாயகர்கள் பனிக்கரடியை பின்னால் முகர்ந்து புணர்வதுபோல நெருங்கி ஆட அவர்களுக்கு பின்னால் இன்னும் நாற்பதுபேர் ஆட, படம்பார்கும் எனக்கு மண்டைக்குள் ஆயிரம் அட்டைகள் புகுந்ததுபோல் இருக்கும். இந்த அரியண்டங்களைத் தாங்க முடியாமல் பாலிவூட் சினிமாக்களை தவிர்த்துவிடுவது உண்டு. தமிழ் சினிமாவில் மட்டும் அப்ப என்னதான் வாழுதாம் என்று உங்களுக்கு கேள்வி எழலாம் அதில் பிழையே இல்லை. அதே நிலைமைதான்.

விதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சிலது மட்டுமே அதிஷ்டவசமாக பார்கக்கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான் Taare Zameen Par. அமீர்கான் மீது தனிப்பட்ட நம்பிக்கை எனக்கு அவரது சமூக செயல்பாடுகளை ஓட்டி இருகின்றது. இந்த டிவிடி கைக்குவரும்போது எந்த நம்பிக்கையும் இன்றி முன் எடுகோள்கள் எதுவும் இன்றி பார்க்கத்தொடங்கினேன்.

வசதியான பொருளாதார நிலையினைக்கொண்ட குடும்பத்தில் அப்பா,அம்மா,அண்ணாவோடு சேர்ந்து கடைசி பிள்ளையாக இஷான். இஷான் எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரிப்பவன். அவனது விசேஷ கற்பனையில் தினமும் வாழ்கின்றான். இரண்டாம் ஆண்டில் பெயிலாகி மீண்டும் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கின்றான். படிப்பில்தான் அவனுக்குப் பிரச்னை. எழுத்துக்களை வேறு பிரித்தறியவோ, நினைவில் தக்கவைத்துக் கொள்ளவோ,வாசிக்கவோ முடிவதில்லை. விளையாட்டில் ஒரு பந்தைக்கூட சீராக இலக்குவைத்து எறிய முடிவதில்லை. எழுத்துக்கள் எல்லாம் இடம் மாறி அவனது கற்பனையில் புகுந்து பரவசப்படுத்துகின்றன. சராசரி பொடியன்கள்போல் அவனால் வயதிற்கு தகுந்தால்போல் எழுதமுடியவில்லை. பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் மிக மட்டமான மதிப்பெண்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் அவன் ஒரு இயல்பான, துடிப்பு மிக்க, குறும்புத்தனமான துடிப்புடன்கூடிய பொடியன். அவனால் மிகுந்த கற்பனை ஆற்றலுடன் ஓவியம் வரைய முடிகின்றது.

படிப்பில் நிலைமை மேலும் சிக்கலாக பள்ளி நிர்வாகம் அவனைத் தொடர்ந்து அடுத்த வருடம் படிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறுகிறார்கள். எல்லை மீறிய செல்லத்தாலும் விளையாட்டுத்தனத்தாலும் அவன் இப்படியாகி விட்டதாகக் கருதும் தந்தை அவனைத் தனியாக வேறொரு ஊரிலிருக்கும் பள்ளியில் சேர்க்க முடிவு செய்கிறார். அங்கேயே ஆசிரியர்களின் கண்காணிப்பில் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும் இது அவனது நிலைய மாற்றும் படிப்பில் குவிந்த கவனம் வரும் என்று நம்புகின்றார்.

இஷான் போக மறுக்கின்றான். அப்பா,அம்மாவின் ஸ்பரிசத்தில் இருந்து விலகிச்செல்வதினை கொடுமையாக மறுகின்றான். அழுது அடம் பிடிகின்றான். பெற்றோர்களுக்கு உள்ளே வலிகள் இருந்தாலும் அவனின் நன்மை கருதி புதிய பாடசாலையில் சேர்த்துவிடுகின்றார்கள். புதிய சூழல் அவனை பயப்படுத்துகின்றது. ஒருவித தனிமையில் தன்னை ஒப்படைக்கின்றான். அப்பா,அம்மாமீது தாங்க முடியாத கோவத்தில் இருக்கின்றான். தனிமையில் அவனது சோகங்கள் கரைகின்றது.

வகுப்பறையில் அவனது இயலாமை புரிந்து கொள்ளப்படமால் போகின்றது, ஆசிரியர்களால் தண்டிக்கப் படுகிறான். கிண்டலடிக்கபடுகிறான், சக மாணவனான கால் ஊனமுற்ற ஒருவன் மட்டும் அவனுக்கு ஆறுதலாக இருக்கிறான். இஷானும் அவனுடன் நெருக்கமான நண்பன் ஆகின்றான். இருவருக்கும் இடையிலான நட்பு ஆழமாக சில காட்சிகளில் சொல்லப்படுகின்றன.

இந்நிலை சென்றுக்கொண்டிருக்க பள்ளிக்கு புதிய தற்காலிக ஓவிய ஆசிரியராக வருகிறார் நிகும்ப். (அமீர்கான்). கற்பித்தலில் புதிய அணுகுமுறைகொண்ட இளைஞராக அவர் இருக்கின்றார். முதல் நாளே தனது விசேஷ திறமையினால் எல்லாச் சிறார்களையும் கவர்ந்து விடுகிறார். இஷான் மட்டும் அவருடன் ஒன்ற மறுக்கிறான். ஓவியமும் வரையாமல் ஒதுங்கிச் செல்லும் அவனுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது எனப் புரிந்து கொள்ளும் அவர், அவனுடைய புத்தகங்களை பார்க்கிறார்.

அவன் விடும் பிழைகளின் ஒழுங்கு முறைகளை வைத்து அவனுக்கு கற்றல் குறைபாடு (Dyslexia) இருப்பதினை புரிந்துகொள்கின்றார். அவனுக்கு இருக்கும் வேறு திறமைகளை கண்டுபிடித்து அந்த வழியில் அவனை ஊக்குவித்து அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளைக் களையவேண்டும் என்பதினை உணர்கின்றார், அவனுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோரைச் சந்திக்கிறார். அங்கு அவன் வரைந்த படங்களைப் பார்த்து, அவனிடம் இருக்கும் ஓவியம் வரையும் அசாத்திய திறனைக் கண்டு கொள்கிறார். ஓவியத்தினை தூண்டுதலாக வைத்து அவனது மையப் பிரச்னையை அதிலிருந்து அவனை மீட்க முயல்கின்றார்.
ஒரு நாள் வகுப்பறையில் Dyslexia குறைபாட்டுக்கான அறிகுறிகளான தோற்றப்பாடுகளை விவரித்துச் செல்கின்றார் ஏனைய மாணவர்கள் அதனை நகைச்சுவையாக எண்ணி சிரிக்க, இஷான் மட்டும் அதிர்ச்சியடைகிறான். இறுதியில் இப்படியெல்லாம் ஒருவனுக்குத் தோன்றியிருக்கு அவன் யார்? என்று கேட்க, அவன் தன்னைத்தான் கூறுகிறார் என்றெண்ணி திகைக்கிறான். அவர் உடனே ஐன்ஸ்டைனின் படத்தைக் காண்பிக்கிறார். ஆச்சரியத்துடன் அவனிருக்க, வரிசையாக டாவின்சி, எடிசன், அபிஷேக் பச்சன் போன்ற பிரபலங்களின் படங்களைக் காட்டுகிறார். அவனது தாழ்வு மனப்பான்மையை நீக்க அவர்கையாளும் உத்திகள் நீக்கமர அற்புதமாக காட்சிப்படிமமாக ஒளிப்படம் ஆகின்றது.

இறுதியாக இஷானிடம் தனியாக 'இந்த பாதிப்புக்குள்ளான இன்னொருவனைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை' என, மீண்டும் இஷான் திகைக்க 'அது நான்தான்' என்கிறார் நிகும்ப்.

அதன் பின் இஷான் நிகும்ப் உடன் நட்பாகி விடுகிறான். இஷானுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாக சுடர்விடுகிறது. தாழ்வுமனப்பான்மை மெல்ல மெல்ல போகின்றது. நிகும்ப் தலைமை ஆசிரியர் அனுமதிபெற்று, எல்லாப் பாடங்களையும் அவனுக்கு தனியே பிரத்தியேகமாக கற்பிக்கிறார். அவனால் இப்பொழுது வாசிக்க, எழுத ஓரளவு முடிகின்றது. ஒருகட்டத்தில் முழுவதுமாக முன்னேறிவிடுகின்றான்.

பாடசாலையில் திறந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் ஓவியப் போட்டி ஒன்றை நடாத்துகிறார் நிகும்ப். அதில் இஷானுக்கு முதலிடம் கிடைக்கிறது. பாடசாலையின் ஆண்டு இதழில் முகப்பு அட்டையில் அவன் வரைந்த படம். விடுமுறைக்காக அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வந்த அவனின் பெற்றோர் அவனைப் பற்றி ஆசிரியர்கள் பெருமையாகப் பேச மிகுந்த ஆச்சரியப்படுகிறார்கள். மீண்டும் இஷானை அழைத்துச் செல்ல முற்பட, அவனோ மறுத்து திரும்பி நிகும்பிடம் ஓடிவர, அவர் அவனித் தூக்கிக் கொள்ள படம் நெகிழ்ச்சியாக முடிவைகின்றது.

இஷான் பாத்திரத்தில் நடித்த சிறுவனின் நடிப்பு பிரமிக்கவைக்கும். ஒவ்வொரு முகபாவனைகள், தத்தளிக்கும் உணர்சிகள் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
வர்த்தக ரீதியான படங்களில், மிக வித்தியாசமான முயற்சிகளை தொடரந்தும் செய்து வருபவர் அமீர்கான். அவரது இயக்கத்தில் வெளியான முதலாவது படம் இது. அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த இன்னொரு புதிய ஆளுமையைக் கண்டு பிரமிக்க வைக்கிறது. புதிய கதைக்களம், சலிப்புத் தட்டாத தொய்வில்லாத நெகிழ்ச்சியான திரைக்கதை. முதல் முயற்சியிலேயே மிகச் சிறந்த திரைபடம் ஒன்றினை தந்துள்ளார். தான் இயக்கிய படத்தில் தனக்கு மிகச்சாதாரமான பாத்திரத்தினை ஒதுக்கி ஒரு சிறுவனுக்கு முக்கிய பாத்திரம் கொடுத்து அசத்தியுள்ளார். நம்ம தமிழ் சினிமாவில் இதுவெல்லாம் நடக்குற கதையா?

இந்தப் படத்தை பார்க்கவைத்த சன்சிகனுக்கு கோடானுகோடி நன்றிகள்.


Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP