இலவு - குறும்பட விமர்சனம்
>> Sunday 31 May 2015
வெளிநாட்டு மாப்பிள்ளை, நல்ல சம்பந்தம் என்ற விம்பத்தில் அவசரமாக திருமணம்
செய்யப்பட்டு பிற்பாடு முரண்நகையான அனுபவங்களை எதிர்கொள்ளும் நிலையை விளக்கும் குறும்படமே “இலவு”. புலம்பெயர் ஆண்களுக்கு தாயகத்திலுள்ள பெண்களை
திருமணம் செய்துகொடுக்க முன் தீவிர விசாரிப்புகள் தேவை என்பதினை வலியுருத்ததும்
கருவை இயக்குனர் வரோதயன் இலவு குறும்படத்தில் முன்வைக்க முற்பட்டுள்ளார்.
மூலக்கதை தெளிவாக இருந்தாலும் சொல்ல எடுத்துக்கொண்ட வடிவம் செய்நேர்த்தியின்றி
அபத்தமாக இருகின்றது. பாத்திரங்களுக்கு இடையிலான கட்டமைப்புகள் முழுமையில்லாமல் பரிதாபமாக பரிமாணிக்கின்றன.
தந்தை மகளோடு அதீகபாசதில் இருக்கின்றார், வெறும் புரோக்கரின் வாய்மொழி பேச்சுக்கு
ஒத்திசைந்து இயங்கி எந்த சிறிய விசாரிப்புக்களும் இன்றி பையனின் புகைப்படத்தை
மகளுக்கு காண்பிகிறார். நமது பிரதேச சூழ்நிலையில் இவையெல்லாம் சாத்தியமா?
புரோக்கரிடம் உரையாடும் காட்சிகள் அறிவியல் சித்தரிப்புகள் இன்றி சொல்லப்படும்
மட்டமான காட்சிக்கோர்ப்புக்களாக இருகின்றன. மாப்பிள்ளையின் குடும்பப்பின்னணியோ, சாதீயம்தொடர்பாகவோ அல்லது வேலைதொடர்பாகவோ பெண்வீட்டாருக்கு நம்பகத்தன்மைமையைத்
தரும் விடயங்கள் அடிப்படையாகவேயில்லை.
காட்டப்படும் காட்சியின் தொடர்ச்சியில் நம்பகத்தன்மை யதார்த்த சித்தரிப்புக்களின் மையத்தை விட்டுவிலகிக்கொண்டே இருகின்றன. சரியான
விசாரிப்புகள் இன்றி வெளிநாட்டு ஆண்களுக்கு இங்கே உள்ள பெண்களை
திருமணம்செய்துவைப்பதில் கவனம்தேவை என்ற விழிப்புணர்வை இயக்குனர் சொல்லவந்தால்
அதில் அவரையறியாமலே அவர் தோற்றுள்ளார். மாப்பிள்ளையை விசாரிகின்றார்கள் அப்படியும்மீறி
தவறுகள் நடைபெறுகின்றன என்பதினை இயக்குனர்சொல்ல முன்வந்திருந்தால் தர்கங்கங்களும்
சொல்லவந்த பேசுபொருளும் உவப்பாக இருந்திருக்கும். குறும்படத்தில் விசாரிப்பு
என்ற பேசுபொருளேயில்லை. தந்தையின் அழைப்பில்லாமல் புரோக்கர் வருகின்றார்,
பையனைப்பற்றி சொல்கின்றார், மகளின் தகப்பனார் பாடசாலை சென்றுகொண்டிருந்த மகளையும்
ஒரேநாளில் தடுத்து திருமணம் செய்துவைப்போம் என்ற முடிவுக்குவருகின்றார். பாசமாக
வளர்த்த தகப்பனின் மன எண்ண ஓட்டங்களின் மாற்றம் தொடர்பாக எந்த காட்சி விளக்கமும்
இல்லை. படம் ஆரம்பிக்கும்போதே பார்வையாளன் முடிவினையும் உய்த்தறிந்துகொள்கின்ற
சூழல் இங்கேயுண்டு.
பெண் தனது ஆண் நண்பர்களை சந்திக்கும்போது இயல்பாகவே தனது கணவன்தொடர்பான கசப்பான
விடயங்களை அறிந்துகொள்கின்றாள். இயல்பான விசாரிப்பிலே இந்த உண்மைகள் வெளிவரும்போது
மிகவும் பாசமாகவளர்த்த தந்தையின் விசாரிப்புகள் ஏன் அபத்தமாக இருந்தன
என்றகேள்விக்கு விடையில்லை. திரைக்கதையினை அவிழ்க்கும் முடிச்சுகள் சுவாரசியம்
இன்றி தொடர்ச்சியாக இருகின்றன.
வசனங்கள் உரையாடலை வெளிப்படுத்தும் முறையில் ஏன் இந்தனை செயற்கைதன்மை என்று
புரியவில்லை. ஒரேமீடிறனில் ஏற்றவிறக்கமின்றி மென்மையாக இருகின்றன. படம்முழுவதும்
நடிப்பின்தன்மை மந்தமாக இருகின்றன. பாவனைகளை உடல்மொழினூடாக வெளிப்படுத்தும்
நுட்பம் இல்லை.
ஒளிப்பதிவுகளில் முக்கியமான வசன அமைப்புகளை வெளிக்கொணர க்ளோஸ்-அப் காட்சிகளின் தேவைப்பாடுகள் அதிகமுண்டு. இக்குறும்படத்தில் முக்கியம் முக்கியமின்மையை வேறுபடுத்தி பிரித்துக்காட்ட ஒளிப்பதிவுச்சட்டங்கள்
உதவவில்லை. வெறும் படம்பிடித்துகாட்டும்
ஊடகமாக ஒளிப்பதிவு அமைந்திருக்கின்றது.
மெலிதாக ஒலிக்கும் சோகப்பாடல் உட்பட பின்னணியிசை
காட்சிகளுடன் பொருந்த முற்பட்டாலும் இசையின் செறிவுத்தன்மையில்
தொழில்நுட்பநேர்தியில்லை. காட்சிக்கோர்ப்புக்கள் இன்னும் சென்மைபடுத்தப்பட்டு
இருக்கலாம். உள்ளடக்கம் ,வடிவம் இரண்டிலும் செய்நேர்த்தியில்லை.
செறிவான உள்ளடக்கத்தை உருவாக்கி தகப்பனுக்கும் மகளுக்கும் இடையிலான மண
எண்ணவோட்டத்தை யதார்த்தம்மீறாமல் உருவாகியிருந்தால் இக்குறும்படம் கொண்டாடக்கூடிய
வடிவத்தில் இருந்திருக்கும். இயகுனர் இன்னும் பயிற்சியையும் நுண்ணிய
அவதானிப்புகளும் அதிகரித்தால் அடுத்த கட்டத்துக்குச் செல்லமுடியும்.
வலம்புரி பத்திரிகைக்காக