A Gun & A Ring - ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்

>> Tuesday 22 September 2015

யாழ் சர்வதேச திரைப்படவிழாவில் இறுதியாகக் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படம் A Gun & A Ring (ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்). இத்திரைப்படத்தை வெண்திரையில் பார்வையிட யாழ் திரைப்பட ரசிகர்கள் ஒருவித எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். நானும் பரவசத்துடன் அத்திரைப்படத்தைப் பார்வையிட அரங்கில் மெல்லிய குளிர்காற்றில் ஒப்புவித்துக் காத்திருந்தேன். 

இத் திரைப்படத்தின் நிகழும் களம் கனடாவாக இருக்கின்றது. கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஈழத்து அகதிகள், ஒரு சூடான் நாட்டு அகதி, இரு கனடிய காவற்துறைப் புலனாய்வாளர்கள் ஆகியோர் கதைமாந்தர்கள். நாயகன், நாயகி எனப் பிரதானப்படுத்தும் பாத்திரங்கள் எவரும் இல்லை. மிக வித்தியாசத் தன்மைகளைக்கொண்ட ஆனால் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து செல்லும் ஆறு தனிக்கதைகளைக் கொண்டிருக்கின்றது. ஆறு தனித்தனி கதைகளின் மையக்கோர்ப்புத் திரைக்கதையில் நிகழ்கின்றன. அதன் மையம் போரின்பின் எஞ்சிய உளவியல் நெருக்கடிகளின் உற்கூறுகளின் பிரதிபலிப்பின் வடுவாக இருக்கின்றன. ஒருமோதிரம் இவற்றை இணைகின்றது. இராண்டாயிரத்துக் பிற்பாடு உள்ள அகதிகளின் வாழ்வியல்போக்கின் மாறுதல்களை, நெருக்கடிகளைக் கதையின் மையம் தொகுத்துக் கொண்டிருக்கின்றது

1980களின் நடுப்பகுதியில் தமிழகத்தில் விடுதலை இயக்கங்களின் பயிற்சி முகாம்கள் பரவலாக இயங்கிக்கொண்டிருந்தன. அந்த முகாம்களின் மனித உரிமை மீறல்கள் பெருவாரியக இடம்பெற்றுக்கொண்டிருந்தன. கொடூரமான படுகொலைகள் சித்திரவதைகள் ரகசியமாக நிகழ்த்தப்பட்டிருந்தன. தாயக விடுதலைக்காகப் பெரும் கனவுகளோடு சென்ற பல இளைஞர்கள் வெறும் சந்தேகங்களின் பேரிலே அடித்துத் துடிக்கக் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். அந்தச் சந்தர்ப்பத்தின் மைய இழையில் இருந்தே “ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்” படத்தின் கதை ஆரம்பமாகிறது. 

அச்சித்திரவதைகளை நிகழ்த்தும் இயக்கம் என்ன இயக்கம் என்று ஊகிப்பதினை பார்வையாளர்கள் ஊகித்துப்புரிந்துகொள்ளும் வகையில் விடப்பெற்றிருக்கின்றன. முக்கியமாக விடுதலைப்புலிகளை அந்த இயக்கமாகத் தாம் காட்சிப்படுத்தவில்லை என்பதினை இயக்குனர் சில வசன இடைச்செருகல் மூலம் தெளிவுபடுத்துகின்றார். அந்த இயக்கத்திலிருந்து தப்பியோட திட்டமிட்ட போராளிகள் விசாரணை செய்யப்படும்போது விசாரணைக்கு உள்ளாகும் போராளி, அங்கிருந்து தப்பிப் புலிகள் இயக்கத்தின் முகாமிற்கு ஓடத் திட்டமிட்டிருந்ததாகச் சொல்கின்றான். இந்த வசனம் படத்தில் சேர்க்கப்பட்டிருக்காவிட்டால் மிகப் பெரிய எதிர்ப்புகளைப் புலம்பெயர் தமிழர்களிடன் சந்தித்திருக்கலாம். சித்திரவதைக்குப் பொறுப்பானவனுக்குப் படத்தில் கொடுக்கப்படும் “இரும்பன்” என்ற பெயர் புனைப்பெயர் புளொட்டில் ஒருகாலத்தில் நடுங்கவைத்த பெயரும் “டம்மிங்” கந்தசாமியின் செல்லப்பெயருமான “சங்கிலி” என்ற பெயரோடு பொருந்திப்போகின்றது. புளொட்டை அவ்சித்திரவதைகளை நிகழ்த்தும் இயக்கமாகப் பார்வையாளன் எடுத்துக்கொள்வதற்கான வெளி திரைப்படத்தில் கொடுக்கப்படிருகின்றது


கதையின் உட்கட்டுமான படிமத்தில் இதுவரை தமிழ்ச் சினிமாவில் பிரதிபலிக்கமுடியாத இரு பேசாவிடயங்கள் இந்தப் படத்தில் பேசப்படுவதைக் கவனத்தில்கொள்ள முடியும். ஓரினசேர்க்கையை விரும்பும் ஒருபாலுறவாளர்களான இரு தமிழ் இளைஞர்களின் காதல், யதார்த்த நிலைமையில் கலைக்கப்படுவதையும் அதன் துயரங்கள் மனவழுத்தங்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஆறு கதைகளில் இது ஒரு கதையாக இருந்தாலும் படம் முழுவதும் அந்தத் துயரை தொட்டுக்கொண்டே இருக்கின்றதது. 

ஓர் ஆபிரிக்க அகதிக்கும் ஈழத் தமிழ்ப் பெண்ணுக்குமான காதல் அரும்பும் மகத்துவமான தனித்துவங்கள் மிகச் சில காட்சிகளிற்குள்ளேயே நுட்பமாகத் திகட்டாத உணர்வுப்பூர்வத்துடன் ஒளிச்சட்டங்களில் உருவகிக்கின்றது. ஒருவகையில் ஆழமாகத், தமக்கிடையே ஒத்த துன்பங்களைத் தமது உரையாடல்கள் மூலம் ஒருவரையொருவர மீட்டுக்கொள்வதும் ஆறுதலாக இருப்பதும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுகின்றது. இருவரது இணைவுடனேயே படம் முடிவுக்குவருகின்றது

தமிழகத் திரைப்ட உருவாக்கப்பாணியில் இருந்து முற்றிலும் விடுபட்டு யதார்தவதமாகவும் உற்புற அகப்புற திரைப்ட கட்டுமான உருவாக்கத்தில் பரிமாணித்து இருப்பது மிகப்பெரிய ஆறுதல். இலங்கையில் உருவாகப்படும் தமிழ் குறும்படங்கள், முழுநீளதிரைப்படங்கள், பாடல்கள் பிரதானமாகத் தமிழகத் திரைப்படங்களைப் பிரதிசெய்ய முயன்று தமது அழகியலை அழித்துச்செல்கின்றன. வசனங்களை மாற்றுவதிலோ போர்சார்ந்த வலிகளைப் பேசவதனாலோ இலங்கை தமிழ்சினிமாவாக அடையாளப்படுத்தும் என்று நினைகின்றார்கள். ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் உரையாடல், காட்சிக்கட்டுமானங்கள், உடல்மொழி என்பவற்றில் தன்னைத் தனித்துவமாக நிறுவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறையின் சுழற்சிகளை அப்பட்டமாக ஒப்பேற்றுகின்றது

படத்தில் ஒலிக்கும் வசனங்கள் இலங்கைதமிழ் வட்டாரவழக்கை மிகக்கூர்மையாகப் பிரதிபளிகின்றது. மதன் பாஸ்கியின் உரையாடல்கள் பிளாக்-கொமடியின் தன்மையைக் கொண்டிருக்கின்றன. பார்வையாளர்கள் விழுந்துவிழுந்து சிரித்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. 

நான்லீனியர் திரைக்கதையமைப்பில் கதை நகர்வதும் பார்வையாளர்கள் பின்னால் துண்டு துண்டாகக் காட்சிப்படுத்தப்படும் காட்சிகளைப் பார்த்துப் புரிந்துகொண்டு தமக்கிடையே சிலாகிப்பதினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 
இயக்குனர் லெனின்
ஒளி, ஒலி, படத் தொகுப்பு மற்றும் இதர தொழில்நுட்ப ரீதியில் படம் அறியப்பட்ட தமிழர் தரத்தை ஓரளவுக்கு மீறியிருக்கிறது. தொண்ணூறாயிரம் கனடிய டொலர்கள் செலவில் இப்படத்தை லெனின் தயாரித்திருக்கிறார் என்றால் நம்புவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். இரண்டே வாரத்துக்குள் படத்தைத் தயாரித்திருக்கிறார். பின்னணியில் பல சிரமங்களை எதிர் கொண்டிருக்கலாம். முதன்மையான பத்துத் திரைப்படங்ளைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் “ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்” திரைப்படத்துக்குத் தனியிடமுண்டு. காலம் அந்த மரியாதையை இத்திரைப்படத்திற்குக் கண்டிப்பாக வழங்கும். சமரசத்தில் தன்னை உற்படுதாமல் தொடர்ந்தும் லெனின் இயங்குவாரானால் சர்வதேசத் திரைப்படச் சந்தையில் லெனினும் தனற்கான தனியிடத்தை ஏற்படுத்துவார்.



Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP